முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவை நவம்பர் 1 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

0
103

2001 ஆம் ஆண்டு அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக ஊர்வலமாக சென்றபோது  முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பயணித்த வாகனம் நபர் ஒருவர் மீது மோதி மரணம் சம்பவித்தமை தொடர்பாக  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவை நவம்பர் மாதம்  முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த   இன்று  உத்தரவிட்டார்.

முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று காலை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணிகளுடன் சரணடைந்ததையடுத்து சரத்குமார குணரத்னவை  பொலிஸார் மன்றில் ஆஜர் செய்தனர்.

2001 ஆம் ஆண்டு  நீர்கொழம்பில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பயணித்த வாகனத்தில் மோதி  ஒருவர் மரணமானதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.

நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் பின்னர்  பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து இடம்பெற்ற வழக்குகளின் போது முன்னாள் பிரதி அமைச்சர் மன்றில் ஆஜராகாததை அடுத்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து நபர் ஒருவருக்கு மரணம் ஏற்படுத்தியமை தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி அமைச்சர்  நவம்பர் 1 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)