சிரேஸ்ட பிரஜைகளின் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களை சிறப்பாக செயற்பட வைக்க வேண்டியது எமது எதிர்ப்பார்பாகும் – மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்

0
111

சிரேஸ்ட பிரஜைகளின் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களை சிறப்பாக செயற்பட வைக்க வேண்டியது எமது எதிர்ப்பார்பாகும்.  அதற்காக பல மாத முயற்சியின் பிறகு சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தை  இன்று ஆரம்பிக்க முடிந்துள்ளது என்று மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பெரியமுல்லை 159 ஏ, கிராம சேவகர் பிரிவிற்கான  சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு பெரியமுல்லை சவுன்டர்ஸ் வீதியில் அமைந்துள்ள சவுன்டர்ஸ் மண்டபத்தில்  வெள்ளி;க்கிழமை (5)  மாலை இடம்பெற்றது.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஈசான், மஹர  பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் எஸ்.எம். அஸ்ரம்,  கிராம சேவகர் சுல்தான் ஜினூஸ், நீர்கொழும்பு பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாளாகும். சிரேஸ்ட பிரஜைகளுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை காரணமாக சங்கத்தில் அங்கத்துவம் வகிப்போர் இனிமேல் அரசாங்கத்தினால் பெறக்கூடிய பல நன்மைகளை அடைய முடியும். பெரியமுல்லை 159 ஏ, கிராம சேவகர் பிரிவில் 60 வயதை கடந்த 575 இற்கும் மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகள் உள்ளனர். எமது சமூகத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த சிரேஸ்ட பிரஜைகள் பலர் இங்கு வருகை தந்துள்ளனர். சகலரையும் ஒன்றுபடுத்தி  கிராம சேவகர் பிரிவில் உள்ள சகல சிரேஸ்ட பிரஜைகளுக்கும் சேவையாற்ற இந்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சிரேஸ்ட பிரஜைகள் சங்கங்கள்  சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அவதானித்துள்ளோம். ஏதிர்காலத்தில் இந்த சங்கத்திற்கும் அதுபோன்று செயற்பட நாங்கள் வழிகாட்டல் செய்வோம்.

இந்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிரேஸ்ட பிரஜைகளுகளுக்கான  அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கப்படு;ம். இதன் மூலமாக பல சலுகைகளையும் நன்மைகளையும்  அவர்கள் பெற முடியும். அதேபோன்று தேவையுடைய அங்கத்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பி;த்து வைக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் புதிய நிருவாகக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன் விபரம் வருமாறு:

தலைவர் – ஏ.எஸ்.எம். சுபர்டீன்

உப தலைவர் – முஹம்மத் கலீல்

செயலாளர் –  ஆனந்த சிவம்

உதவி செயலாளர் – எம். அலிகான்

பொருளாளர். எம். முஹம்மத்

இதுதவிர ஏழு பேர் கொண்ட  உறுப்பினர் குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

நிகழ்வில் மஹர  பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர எஸ்.எம். அஸ்ரம், கிராம சேவகர் சுல்தான் ஜினூஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

 

படம் :  நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், மஹர  பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் எஸ்.எம். அஸ்ரம்,  கிராம சேவகர் சுல்தான் ஜினூஸ் அகியோர் உரையாற்றுவதையும், முக்கியஸ்தர்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும்,  பங்குபற்றிய சிரேஸ்ட பிரஜைகளையும் காணலாம்.

4

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)